சமீபத்தில் சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று காலை வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டபோது, பயிற்சி மையத்தில் இருந்து பறந்து சென்ற ஒரு குண்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் பாய்ந்தது.
அதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் உயர் சிகிச்சைக்காக தஞ்சைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுவன் புகழேந்தி உள்ளார்.
இதனிடையே, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததைக் கண்டித்தும், நீதி கேட்டும் சிறுவனின் உறவினர்கள் புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மா சத்திரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக தமிழக அரசு மூட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், CISF வீரர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், இச்சம்பவம் குறித்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விசாரணை செய்து வருகிறார்.
இந்த விசாரணையில் திடீர் திருப்பமாக மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் ஒரு பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் மற்றொரு பகுதியில் அகில இந்திய அளவில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக மத்திய மண்டல காவல் துறையைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் பயிற்சி எடுத்து உள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களை வரவழைத்து தற்போது விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.