பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பு; அரசின் புதிய திட்டம்

பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை ஓட்டுநர், நடத்துநரே பேருந்துகளிலிருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாகத் தற்போது அதிகம் பார்க்கப்படுவது பேருந்துகள்…

பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை ஓட்டுநர், நடத்துநரே பேருந்துகளிலிருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாகத் தற்போது அதிகம் பார்க்கப்படுவது பேருந்துகள் தான். சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பேருந்து பயணங்களில் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாகத் தற்போது பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தங்களை உருவாக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் பயணிக்கும் ஆண் பயணி எவரேனும் ஆபாசமான செயலை செய்தாலோ, உற்றுப் பார்ப்பது, விசில் அடிப்பது, கண் சிமிட்டுவது, புண்படுத்தும் சைகைகள் அல்லது பாடல்களைப் பாடுவது, தவறான வார்த்தைகளை உச்சரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டாலோ குற்றமாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை எச்சரிக்கைக்குப் பிறகு ஓட்டுநர், நடத்துநரே பேருந்துகளிலிருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பெண் பயணி அல்லது சிறுமிக்கு எரிச்சல், துன்புறுத்தலை ஏற்படுத்தும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை காண்பித்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் பயணி அல்லது சிறுமியின் பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகள் எதையும் கேட்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.