இந்தியாவில் போலி சான்றிதழ் பெற்று, சீனாவில் மருத்துவம் படித்த நேபாள எம்.பி கைது!

நேபாள காங்கிரஸ் எம்பி சுனில் குமார் சர்மா பீகாரில் இருந்து போலி பட்டம் வாங்கி, அதை சீனாவில் மேற்படிப்புக்குப் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நேபாள காவல்துறையின் மத்திய புலனாய்வுக் குழு (CIB)…

நேபாள காங்கிரஸ் எம்பி சுனில் குமார் சர்மா பீகாரில் இருந்து போலி பட்டம் வாங்கி, அதை சீனாவில் மேற்படிப்புக்குப் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக நேபாள காவல்துறையின் மத்திய புலனாய்வுக் குழு (CIB) கொடுத்துள்ள தகவலின் படி, நேபாள மருத்துவக் கவுன்சிலுக்கு கிடைத்துள்ள புகார்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்காக சில மருத்துவர்கள் போலியான கல்விச் சான்றிதழ்களை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் டாக்டர் அம்ரித் சௌத்ரி, டாக்டர் ராம்பாபு யாதவ், டாக்டர் அரினா யாதவ் மற்றும் டாக்டர் ரஞ்சித் குமார் யாதவ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேபாளத்தின் மொராங்-3ல் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர் சுனில் குமார் சர்மாவும் இந்த போலி சான்றிதழ் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளின் போலி கல்விச் சான்றிதழ்களை வைத்திருந்தாக குற்றச்சாட்பட்டுள்ள நிலையில், இதனை இந்தியாவின் பீகாரில் இருந்து பெற்று சீனாவில் மேற்படிப்புக்குப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது .

சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளின் உரிமையாளரான சுனில் குமார் சர்மா, நேபாள காங்கிரசில் சேகர் கொய்ராலா முகாமுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். இந்த கைது குறித்து சுனில் குமார் சர்மா கூறுகையில், இந்த விவகாரத்தில் தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தற்போது இந்நிகழ்வு ஆளும் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.