எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார்
தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் முரளி கிருஷ்ணா (18) ஓசூரில் உள்ள தனியார் பள்ளி படித்து வந்தார். கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்தார். அதனைத்தொடர்ந்து முரளி கிருஷ்ணா நீட் எக்ஸாம் போட்டித் தேர்வுக்காக தேர்வும் எழுதியுள்ளார். ஆனால், 160 மதிப்பெண்கள் எடுத்து அவர் நீட் தேர்வில்
தோல்வியுற்றார். இதையடுத்து, மாணவர் முரளி கிருஷ்ணா இந்த ஆண்டும் நீட் போட்டி தேர்வை எழுதுவதற்காக வீட்டிலிருந்தே படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நேற்று மாலை வீட்டுக்குச் சென்ற முரளி கிருஷ்ணா வீட்டிலிருந்த தனது அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்துள்ளார். நீண்ட நேரம் மகன் அறைக்குள் இருப்பதைக் கண்ட அவரது பெற்றோர்கள் கதவை தட்டி அவரை அழைத்துள்ளனர். ஆனால், அவர் எந்த சப்தமும் கொடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, அறையினுள் முரளி கிருஷ்ணா தூக்கு போட்டு உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீஸாருக்கு மாணவன் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்குமா என்னால நீட்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ண முடியல, என்ன மன்னிச்சிருமா. நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணினேன். ஆனா மெடிக்கல் சீட் வாங்கற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண
முடியாது. நான் இந்த முடிவை எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடுமா. நான் உன்ன ரொம்ப
மிஸ் பண்ணுவேம்மா என அவர் தனது தாய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனையடுத்து, மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சிப்காட் போலீசார் மாணவர் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் தூக்கு போட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா