மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் எல்லை பிரச்சனை, நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கும் நிலையில், குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை அமித்ஷா தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்வின்போது உள் துறை அமைச்சர் அமித் ஷாவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜிஎஸ்டி அமலான பிறகு மாநில அரசுகளின் நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கூறினார். வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மின்வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நீட் குறித்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டமன்றத்தில் ஒருமனதாக சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. உள் துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் மதநல்லிணக்கத்தை பேணுவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தென் மாநிலங்களிடையே கலாச்சாரரீதியாக உறவு இருப்பதால் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.