என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி த்ரில் வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நெல்லை மண்டலத்தில், சேரன்மகாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரி மைதானத்தில், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி அணியும், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணியும் களம் கண்டனர்.
இதையும் படியுங்கள் : NCL 2023 : கோவை JCT பொறியியல் கல்லூரியை வீழ்த்தி, இரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி அபார வெற்றி
இதில் டாஸ் வென்ற திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் விஸ்வா 28 பந்துகளில் 29 ரன்களைக் குவித்தார்.
இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியாக கடைசி ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்த திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆட்டம் உச்சகட்ட பரபரப்பை எட்டியது.
இறுதிப் பந்தில் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, தனது பத்தாவது விக்கெட்டை இழக்க, ஒரு ரன் வித்தியாசத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி அணி த்ரில் வெற்றி பெற்றது. களத்தில் நின்று இறுதிவரை போராடிய திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியின் கார்த்திக், 17 பந்துகளில், மூன்று பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.







