32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

எதிர்கட்சி துணைத்தலைவராகிறார் நத்தம் விசுவநாதன் ?

எதிர்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த எதிர்கட்சி துணைத்தலைவர் யார் என்ற கேள்வி எழுவது இயல்பே. அந்த வரிசையில் நத்தம் விசுவநாதனை நியமிக்க அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது ஏன் என்பது குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தினமும் ஒரு பிரச்சனை அதிமுகவில் தலை தூக்குகிறது. அவர் மறைவை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒருபுறமிருக்க, அன்றைய காலகட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக பிரிந்து சென்று சசிகலாவிற்கு எதிராக அரசியல் செய்தார். அதிமுக முடக்கப்பட்டது. இதற்கிடையே சசிகலா  ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற பின்னர் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரனுக்கும், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. பின்னர் டிடிவி தினகரன் அக்கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.ஓபிஎஸ் உடன் எடப்பாடி கைகோர்த்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அவருடன் இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. இப்படியாக அதிமுக ஆட்சி பல்வேறு திருப்பங்களுடன் நிறைவு செய்தது.

ஆட்சி மாறி திமுக பவருக்கு வந்தவுடன், ஓபிஎஸ் தமக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வேண்டும் எனக் கேட்டார். ஆனால் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கு இருந்ததால் அவரே எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை எதிர்க்கட்சி தலைவராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார்.

இப்படி பல்வேறு இடர்பாடுகளுடன் சென்று கொண்டிருந்த அதிமுகவில் ராஜ்யசபா தேர்தல் மூலம் ஓபிஎஸ்-இபிஎஸ் பனிப்போர் எரிமலையாக வெடித்தது. இபிஎஸ் பொறுத்தவரை இரு ராஜ்யசபா உறுப்பினர் தேர்வும் தம்முடையதாக இருக்க வேண்டும் என கருதினார். அதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டார். பின்னர் ஆளுக்கு ஒரு பதவி பிரித்து கொண்டனர்.

இது ஒருபுறமிருக்க, ஓபிஎஸ் திடீரென இப்படி வெகுண்டெழுவதை இபிஎஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு, ஒற்றை தலைமைதான் என்ற முடிவுக்கு வந்தார்.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என பேசினர். இதற்கு ஓபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் இபிஎஸிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, ஒரு வழியாக பொதுக்குழுவில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனால் அடுத்த எதிர்கட்சி துணைத்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவி மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நீண்ட நாட்களாக ஒரு கண் வைத்திருந்தார். ஆனால் எடப்பாடியும், வேலுமணியும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் அவருக்கு அப்பதவி கொடுக்க முடியாது என தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எதிர்கட்சி தலைவராக எடப்பாடி இருப்பதால், எதிர்கட்சி துணைத் தலைவராக முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஏற்கனவே கட்சியின் பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எதிர்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதனுக்கு வழங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதற்கு மற்றொரு முக்கிய காரணம், அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸை நீக்கும் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்ததும், ஓபிஎஸின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

 

இராமானுஜம்.கி,  தேனி விக்னேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading