நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் தில்லைகுமார் என்பவர் பட்டாசுகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார். இவர் தன்னுடைய வீட்டில் நாட்டு வெடிகளையும் பட்டாசுகளையும் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டாசுகள் திடீரென வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில், அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வேகமாக தீ பரவியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்தில் தில்லைகுமார், அவரது மனைவி, தாயார் ஆகியோரும், அண்டை வீட்டில் வசிக்கும் மூதாட்டியும் உயிரிழந்தனர். தில்லைகுமாரின் 5 வயது மகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். தீ விபத்தால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மாதிரிகளை சேகரித்து தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர்.
வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.ராஜேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகே விபத்து குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என தெரிவித்தார்.
இதையடுத்து, பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.