நாகை மீன்வளப்பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கையின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 38 மாணவர்களும், இரண்டு பல்கலைக்கழக ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளபல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 38 மாணவர்கள் இடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் தமிழ்நாடு ஜெ ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மீன்வளப்பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடத்தப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் குறைவான மதிப்பெண் பெற்ற 38 மாணவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களின் துணையோடு கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் சான்றிதழ் நகலுடன் துணைவேந்தர் சுகுமாரனுக்கு புகார்கள் வந்தது.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் பல்கலைக்கழக ஊழியர்கள் துணையுடன் மதிப்பெண்கள் அதிகப்படுத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட பல்கலைக்கழக டைப்பிஸ்ட் இம்மானுவேல் கடந்த மே மாதம் 30 ஆம் தேதியும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜவகர் கடந்த ஜூன் 23ஆம் தேதியும் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் கவுன்சிலிங்கில் முறைகேடாக கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் பட்டியலையும் விசாரணை குழுவினர் ஆய்வு செய்து வந்தனர். இதில் 38 மாணவர்கள் முறைகேடாக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு இளங்கலை பாடப்பிரிவில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. விசாரணைக்குழு அளித்த அறிக்கையின்படி பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமாரன் 38 மாணவர்களையும் நேற்று இடைநீக்கம் செய்துள்ளார். 38 மாணவர்களும் மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.
பல்வேறு நடைமுறைகளை பின்பற்றும் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







