பள்ளி மாணவி மர்ம மரணம்- 2 ஆசிரியர்கள் கைது

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பகுதி…

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பகுதி கணியாமூர். இந்த கணியாமூர் புறவழிச் சாலையில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கணித அறிவியல் பிரிவில் படித்து வரும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

மர்மமான முறையில் மரணம்

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி மாணவி பள்ளி வளாகத்தில் கீழே விழுந்த நிலையில் கட்டப்பட்ட துணியுடன் கிடந்துள்ளார். இதனைக் கண்ட விடுதி காப்பாளர் மாணவியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அம்மாணவியின் உடல் பிரத பரிசோதனைக்காக ஆய்வு கூடத்தில் வைக்கப்பட்டது.

விசாரணை

மேலும் சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி ராஜலட்சுமி நேரில் சென்று, ஸ்ரீமதியுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு விசாரணை மேற்கொண்டு பள்ளிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 ஆசிரியர்கள் கைது

மர்மமான முறையில் இறந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அம்மாணவியின் பெற்றோர்கள் மற்றம் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரின் போராட்டத்தையடுத்து கணித ஆசிரியர் மற்றும் வேதியியல் ஆசிரியை கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.