“எனது அரசாங்கம் பெண்களால் அமைக்கப்பட்டது” – ஜோரம் மக்கள் இயக்க தலைவர் லால்டுஹோமா

எனது அரசாங்கம் பெண்களால் அமைக்கப்பட்டது என ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் லால்டுஹோமா தெரிவித்துள்ளார். மாநில கட்சியான மிஜோ தேசிய முன்னணி,  தேசிய அளவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.  ஆனால், மிஜோரம்…

எனது அரசாங்கம் பெண்களால் அமைக்கப்பட்டது என ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் லால்டுஹோமா தெரிவித்துள்ளார்.

மாநில கட்சியான மிஜோ தேசிய முன்னணி,  தேசிய அளவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.  ஆனால், மிஜோரம் சட்டப் பேரவைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன.  மிஜோ தேசிய முன்னணி 40 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் களமிறங்கின.  ஜோரம் மக்கள் இயக்கம்,  காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

மிஜோரம் பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்று,  ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.  மிஜோ தேசிய முன்னணி 10 தொகுதிகளிலும்,  பாஜக 2 தொகுதிகளிலும்,  காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.

ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் லால்டுஹோமா, செர்சிப் தொகுதியில் வெற்றி பெற்றார்.  இந்த வெற்றிக்குப் பிறகு ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான லால்டுஹோமா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தற்போதைய இளைஞர்கள் கட்சி அரசியலில் இருந்து விலகியுள்ளார்கள்.  அவர்கள் தாங்கள் நினைத்ததை செய்ய முடியும். ஏனெனில் அவர்கள் கறைபடிந்த அரசியலில் ஈடுபடுவதில்லை.  எனவே மிஜோரம் இளைஞர்களின் தந்தைகள் மற்றும் அவர்களது முன்னோர்கள் ஈடுபட்டுள்ள அரசியலினால் சலிப்படைந்துள்ளனர். எனவே அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்: மின்சாரம் இல்லை…செல்போன் சிக்னல் இல்லை…வெள்ளத்தில் தவிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!

புதிய தலைமையுடன்,  புதிய கொள்கைகளுடன் புதிய அமைப்பை நிறுவ முயற்சிக்கின்றனர்.  இதுதான் தற்போதைய இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  அரசு அனைத்து சட்டங்களையும் மீறுகிறது.  பெரும்பாலான ஒப்பந்தப் பொருட்கள் முறைகேடான டெண்டர் முறையின் கீழ் வழங்கப்படுகின்றன.  இது விதிகளை நேரடியாக மீறுவதாகும்.  எனவே அனைத்து வகையான டெண்டர்களை கட்டுப்படுத்துவதையும் நிறுத்தப் போகிறேன்.

என் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு முறைகேடான டெண்டரும் கொடுக்கக் கூடாது.  இந்த முறை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.  எனது அரசாங்கம் பெண்களால் அமைக்கப்பட்டது.  எனவே அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.  மேலும் அவர்களின் நிலையை உயர்த்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.