வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர் விவகாரத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த குப்பாபூர் கிராமத்தில் நேஹா பப்ளிக் பள்ளி உள்ளது. இங்கு 2-ம் வகுப்பில் படிக்கும் இஸ்லாமிய மாணவர் ஒருவரை மாற்று மதத்தை சேர்ந்த மாணவர்களை அழைத்து அடிக்குமாறு ஆசிரியையும் பள்ளி முதல்வருமான திரிப்தா தியாகி என்பவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில், பள்ளி ஆசிரியை ஒரு சிறுவனை வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களைக் கொண்டு அடிப்பதை பார்க்க முடிகிறது. அந்த 7 வயது மாணவரால் சரியாக பாடம் வாசிக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியை சக மாணவர்களைக் கொண்டு அந்த மாணவரை அடிக்க சொல்கிறார். இது மட்டுமின்றி மாணவனின் மதம் குறித்தும் ஆசிரியர் கருத்து தெரிவிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து முசாபர்நகர் காவல்துறை, ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, நாடு முழுவதும் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அந்த ஆசிரியை மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 504 ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்விரு பிரிவுகளுமே ஜாமீனில் வெளிவரக் கூடியவை. அத்துடன், உடனடி கைது நடவடிக்கையும் தேவைப்படாத பிரிவுகளாகும். இதனிடையே, சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்டு, மாநில கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சமூக ஊடகங்களில் சிறுவனின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு என்சிபிசிஆா் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோரை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணை குறித்து செப்டம்பர் 25-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரப்பிரதேச மாநில அரசுக்கும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பி, உத்தரவு பிறப்பித்துள்ளது.







