முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய மாநில பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் எல்.முருகன் எம்பி ஆனதால் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது .
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 22ம் தேதி எல்.முருகன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம் அவர் ஆஜராகாததால் வழக்கு மே 2 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவதூறு வழக்கு குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், ஆஜராக விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்.முருகன் வரும் 2ம் தேதி ஆஜராக விலக்கு அளித்தும், வழக்கு விசாரணையை ஜூன் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.