குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையில் புகார் அளிக்கப்படும் வன்முறை என்பது மிக மிக குறைவான ஒன்றே . இதில் உண்மைகள் வெளிப்பாடுவதைவிட மறைந்திருப்பதே அதிகம். ஆனால் ஏதோ ஒரு சூழலில் அப்படி மறைக்கப்பட்ட உண்மைகளும் வெளிப்படும் போது சில நேரங்களில் அது தேசத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கிவிடும். அந்த வகையில் சமீபத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகமான NCRB வெளியிட்டுள்ள ஒரு தகவல் இந்தியாவையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. NCRB-ன் தரவுகளின் படி குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலான காலகட்டத்தில் 41,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ
புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில், 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் 2020 ஆம் ஆண்டில் 8,290 பெண்களும் காணாமல் போயுள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. இதனால் இதன் அடிப்படையில் மொத்த எண்ணிக்கையாக சுமார் 41,621
பெண்கள் இந்த ஆண்டுகளில் குஜராத் ,மாநிலத்தில் காணாமல் போனதாக பதிவாகியிருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சிலர், காணாமல்போன சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும், மேலும் அந்த பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்தி சென்று வெளி மாநிலங்களில் விற்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இவர்கள் தவிர , இதுகுறித்து குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா பேசும்போது, காணாமல் போன சில வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்று விசாரித்து வருவதாகக் கூறினார். மேலும் இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல்துறை தீவிரமாக கையாளவில்லை எனவும், இதனால் இப்பிரச்சினைக்கு முடிவில்லாமல் உள்ளது எனவும், சிறுமிகளையும், பெண்களையும் கடத்தி வேறு மாநிலத்தில் விபச்சாரத்திற்கு தள்ளுவதென்பது கொலை வழக்கைவிட மோசமானது என அவர் கூறினார்.
கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, தற்போது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா










