நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்துக்கு முன்பாக நிறைவுபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”2023-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடரின்போது வணிகம் மற்றும் பிற பொருட்கள் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/JoshiPralhad/status/1675032394825613312?s=20
இந்த மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலமாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாக இருக்கும். மேலும் நடைபெறவுள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







