திருச்செங்கோட்டில் தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி புதுமையான முறையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனம் தெருவில் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகள் பிடிப்பது வழக்கம். ஆனால் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் கோழியை பிடிப்பதுதான் முக்கியமான இலக்கு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவார். போட்டியில் ஒரு கயிறு போட்டியாளரின் காலில் கட்டப்படும் அதன் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல் கோழியை பிடிக்க வேண்டும்.
கயிற்றை கையில் பிடித்தோ காலில் பிடித்தோ இழுக்கக் கூடாது என்பது முக்கியமான
நிபந்தனை. சீறிவரும் காளை பிடிப்பது ஜல்லிக்கட்டு என்றால் கண்களைக் கட்டிக்
கொண்டு கோழியை பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டு ஆகும். இந்த போட்டியில் பெண்கள்
சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் கூறும்போது..
”நவீன ஜல்லிக்கட்டு என்பது போட்டியாளரின் கால்களில் ஒரு கயிற்றின் ஒரு முனையும் மறுமுனை கோழியின் காலிலும் கட்டப்பட்டு போட்டியாளரின் கண்கள் கட்டப்படும். தன் உணர்வின் மூலம் கோழியை பிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி வீரத்துக்கு பெயர் பெற்றது என்றால் இந்த நவீன ஜல்லிக்கட்டு போட்டி விவேகத்திற்கு பெயர் பெற்ற போட்டி” என கூறினார்.
இவரை தொடர்ந்து சேலத்தை சார்ந்த போட்டியாளர் சித்ரா கூறும்போது..
“ஜல்லிக்கட்டு போட்டி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பெண்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் சிறுமிகள் பங்கேற்கும்
வகையில் நடத்தியது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறினார்.
இவரை தொடர்ந்து இந்த போட்டியில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது.