12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அலகு தேர்வு!

தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு மாணவர்களை, பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கான அலகு தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தத்…

தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு மாணவர்களை, பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கான அலகு தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில் மே 3 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வு நடப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக தேர்வு அட்டவணை வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் அலகு தேர்வை, வாட்ஸ் அப் மூலமாக நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாணவர்களுக்கென தனி வாட்ஸ் அப் குழுக்களை தொடங்கவும், மாணவர்களுக்கு தேவை யான ஆலோசனைகளை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்-ல், மாணவியருக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழு (Group) ஏற்படுத்த வேண்டும். வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவர்கள், வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித் தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும். விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும். வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக் கூடாது.

ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
……..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.