மாயமான மீனவர் கடற்கரையில் சடலமாக மீட்பு… திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் அருகே மாயமான மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் தெற்குத் தெருவை சேர்ந்தவர்
தொம்மைசிலுவை (50). இவரது மனைவி ராஜகன்னி. இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மீன் பிடி தொழிலாளியான தொம்மைசிலுவைக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் (மே 28) மதியம் புன்னைக்காயல் தூண்டில்பாலம் அருகே மீன்பிடிக்கப்போவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.

அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று காலை தூண்டில் பாலம் அருகே உள்ள கடல் பகுதியில் கை, கால் மற்றும் காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயங்களுடன் தண்ணீரில் மூழ்கியபடி தொம்மைசிலுவை இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, அவரது மனைவி ராஜகன்னி ஆத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.