மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெயில் 240-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விமானப்படை சாகசத்தை பார்க்க வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராத ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : மாபெரும் வெற்றி பெற்ற #Maharaja | இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசளித்த படக்குழு!
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
” மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை பார்வையிட வந்த யாரும் உயிரிழக்கவில்லை என அரசு கூறவில்லை. 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராத ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம். கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்படவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. இறந்த பின்னரே 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்த பின்பு யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும்.

சாசக நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் 2 முறை ஆலோசனை நடந்தது. விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. தேவையான அளவுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாக இந்திய விமானப்படையே நேற்று தெரிவித்திருந்தது. விமான சாகச நிகழ்ச்சியின் போது போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. வெயில் காரணமாக குடை, தண்ணீர் எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. விமானப்படை கேட்டது 100 வசதிகளுடன் கூடிய வார்டு, ஆனால், அரசு தரப்பில் 4,000 படுக்கை வசதிகள் தயாராக இருந்தன.
இதையும் படியுங்கள் : ChennaiAirShow | “ உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசின் விரிவான ஏற்பாடுகளை இந்திய விமானப்படை அதிகாரிகள் பாராட்டிருந்தனர். மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை தருவதற்கு 65 மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெயில் உள்ளிட்ட காரணங்களால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 93 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுவிட்டனர்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.







