மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு நிறுவனங்கள் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் வழங்க கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் வழங்க கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  அவர்களது உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்புநிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்கிறது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!

புயல் பாதிப்பிற்குள்ளான பலர்/வணிக நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுள்ளனர்.  இந்த நிலையில்,  அவர்கள் தங்களது நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.  இந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைகளைத் தளர்த்த வேண்டிய அவசரத் தேவை உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும்,  டிசம்பர் 1 (2023) முதல் பிப்ரவரி 29 (2024) வரை தவணைத் தொகையைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து,  கடன் தவணையையும், வட்டியையும் செலுத்துவதில் 3 மாதங்கள் ஒத்திவைக்க அனுமதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, பிரச்னையின் அவசரத்தை கருத்தில் கொண்டு,  இந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில்,  தேவையான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.