நகர்ப்புற மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு , ஒரு லட்சம் மீன் விரலிகளை மேட்டூர் காவிரி ஆற்றில் விட்டார்.
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் 3-வது பெரிய மீன் உற்பத்தி மற்றும் 2-வது பெரிய மீன் வளர்ப்பு நாடாக இந்தியா உள்ளது. உள்நாட்டு மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு முற்றிலும் வளர்ச்சியடைந்தாலும், அதன் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் வளர்ச்சி இன்னும் உணரப்படவில்லை.
நாட்டின மீன் வகைகளை காப்பாற்றவும், மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மீன்களை வழங்கவும் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நாட்டின மீனக்குஞ்சுகளை இருப்புச் செய்திட 2022-23ம் ஆண்டிற்குத் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், ரூபாய் 1.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆற்றுப் படுகைகள் மூலம் நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்து மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஆற்றோரங்களில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து , மீன் குஞ்சுகள் இருப்பு செய்திட தேர்வு செய்யப்பட்ட ஆறுகளில் சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 3 லட்சம். இவை 100 மி.மீ வளர்க்கபட்டு, முதற்கட்டமாக இன்று 1 லட்சம் மீன் விரலிகள் மேட்டூர் காவிரி ஆற்றின் நான்கு ரோடு அனல் மின் நிலைய பாலப் பகுதியில், நகர்ப்புற மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கே.என். நேருவால் விடப்பட்டது.







