ஈரோடு அருகே வீட்டிற்குள் புகுந்து வயதான தம்பதியினரை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் 20 பவுன் தங்கநகை மற்றும் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பிரபாவதி. ரயில்வே துறையில் பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் இருந்த போது, முகமூடி அணிந்தபடி வந்த மூன்று மர்ம நபர்கள் வயதான தம்பதியினரை தாக்கிவிட்டனர்.
அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகை என 20 சவரன் தங்கநகையை கொள்ளையடித்ததோடு, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல்நிலைய போலீசார், கைரேகை
நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை
மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மூகமூடி கொள்ளையர்களின் இந்த துணிகர சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ரா. கௌரி







