பாகுபலி என்னும் காட்டுயானை வாயில் ரத்தக் காயத்துடன் சுற்றி வருவதால் அதனைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வரும் ஒர் ஆண் காட்டு யானையை மேட்டுப்பாளையம் மக்கள் அதன் உருவத்தை வைத்து பாகுபலி என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம், தாசம்பாளையம், குரும்பனூர், ஓடந்துரை உள்ளிட்ட மலை அடிவார பகுதிகளில் அதிக அளவில் நடமாடி வந்த இந்த யானை, இதுவரை பொதுமக்கள் யாரையும் தாக்கியதில்லை; இருப்பினும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உண்டதால் யானையை தினமும் வனத்துறையினர் கன்காணித்து, வனத்தை விட்டு வெளியேறும் போது அதனை மீண்டும் வனப்பகுதியில் விரட்டி வந்தனர்.
அந்த வகையில், நேற்று இரவு யானை வனத்தை விட்டு வெளியேறிய போது அதன் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு, ரத்த கசிந்த நிலையில் யானை நடமாடியதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து யானையினை பின் தொடர வனத்துறையினர் முயன்ற போது, நெல்லி மலை வனப்பகுதியில் சென்று மறைந்தது.
இது குறித்து மாவட்ட வன உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர், தற்போது காயம் பட்ட பாகுபலி யானையை சிகிச்சை அளிக்க தேடி வருகின்றனர். பாகுபலி யானை ஆண் யானை என்பதால் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலால் காயம் ஏற்பட்டதா? அல்லது வேட்டைக்கு பயன்படுத்தப்படும் நாட்டு வெடியை யானையை கடித்துள்ளதா? என கண்டறிய வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மேட்டுப்பாளையம் வர உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.