மாதவிடாய் குறித்து மனம் திறந்துபேசுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன்!

மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் அதனை வெளிப்படையாக மனம் திறந்து மருத்துவர்களிடம் பேசி தீர்வுகாணவேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டு மே 28-ம் தேதி…

மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் அதனை வெளிப்படையாக மனம் திறந்து மருத்துவர்களிடம் பேசி தீர்வுகாணவேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டு மே 28-ம் தேதி உலக மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் குறித்து ஆளுநர் மற்றும் மகப்பேறு மருத்துவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ இன்று மே 28 உலக மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நாள் அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்பதால் 28-வது நாளில் மாதவிடாய் நாளாக தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல் வருடத்தில் பல மாதங்கள் இருந்தும் ஏன் ஐந்தாவது மாதத்தில் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் பெண்களுக்கு அதிகபட்சமாக 5 நாட்கள் மாதவிடாய் இருக்கும்.

இதன்காரணமாகதான் மே 28-ம் தேதி ஒவ்வொரு ஆண்டு உலக மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் என்றாலே சமூகத்தில் வெட்கப்படவேண்டியது மறைக்கப்படவேண்டியது, விவாதிக்கப்படவேண்டியது அல்ல வெளிப்படையாக சொல்லவேண்டியது அல்ல என்ற அச்சம் இன்றும் பெண்களிடையே உள்ளது.

இது மறைக்கப்படவேண்டிய ஒன்று அல்ல மாதவிடாய் என்பது வெளிப்படையாகப் பேச வேண்டி விஷயமாகும். மாதவிடாய் என்பது பெண்களுடைய உடலில் நடக்கும் இயற்கையான நிகழ்வு. மாதவிடாய் சுழற்சியின்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

பெண்கள் அனைவரும் உலக மாதவிடாய் தினத்தில் மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றிய அறிதலும்,புரிதலும் கொண்டு தேவையான நேரத்தில் குடும்பத்தினருடன் கலந்து விவாதித்து அதைப்பற்றி விழிப்புணர்வு மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.