மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கில் கர்நாடகா அரசு கூடுதல் விளக்க மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உண்மைக்கு புறம்பான விவரங்களை கூறி நீதிமன்றத்தை திசை திருப்புகிறது என கர்நாடகா குற்றச்சாட்டியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
குறிப்பாக மேகதாது அணை என்பது மின்சாரம் தயாரிப்பதற்கான கட்டுமானமே தவிர தமிழகத்துக்கான நீரை தடுப்பதற்கானது அல்ல. மேகதாது அணை என்பது தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு திட்டமே தவிர நீரை சேமித்து கர்நாடகத்துக்கு திருப்பி விடுவதற்கானது அல்ல.
மேலும் பெங்களூரு மாநகர குடிநீருக்கு மேகதாதுவிலிருந்து நீர் எடுப்பது என்பது ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவில் அந்நகரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 4.75 டி.எம்.சி நீரே தவிர வேறு கூடுதல் நீர் அல்ல.
மேலும் காவிரி நீர் பங்கீடு தீர்ப்பில், 177.25 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு மாதந்தோறும் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, எந்த அணையில் இருந்து நீரை விடுவிக்க வேண்டும் என கூறப்படவில்லை.
அதேபோல் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி நீர் வழங்கவேண்டும் என்பது உத்தரவு.
மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் 177.25 நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்றே உள்ளது. எனவே அந்த உத்தரவை மீறாமல் கர்நாடகத்தை பொறுத்தவரை அதன் எல்லைக்குள் எந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்ற உரிமை உள்ளது.
மேலும் மேகதாது விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தனது கருத்துக்களை மத்திய நீர் ஆணையத்துக்கு வழங்க அதிகாரம் உள்ளது.
மேலும் மேகதாது விவகாரம் என்பது கடந்த 2018ல் நடைபெற்ற 2வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக 3, 4, 5, 6, 7, 9, 12, 13, 14, 15 ஆகிய கூட்டங்களின் விவாத நிகழ்ச்சி நிரலிலும் இருந்தது அதற்கு அப்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்து தமிழக அரசு கேள்வி எழுப்பவில்லை.
எனவே மேகதாது விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கர்நாடக அரசு தனது கூடுதல் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.