இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து இந்தியாவிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சர்வதேச விமானநிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோன நிலவரம் குறித்து ஆராய பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிதி ஆயோக் உயர் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.








