நானும் கிறிஸ்துவன் என சொல்லி கொள்வதில் பெருமை கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்க பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பங்கேற்று 2 ஆயிரம் குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, மற்றும் மேயர் பிரியா ஆகியோர்
பங்கேற்றனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன என எல்லாரும் கேட்கிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இங்கு அல்லேலூயா என வாழ்த்து சொல்லுவது தான் திராவிட ஆட்சி. இது தான் சமூக நீதி ஆட்சி இதை தான் பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் எங்களுக்கு கற்று கொடுத்தது என்று கூறினார்.
நானும் கிறிஸ்துவன் என சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது ஒரு கிறிஸ்துவ பள்ளியில்; நான் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். சமூக நல்லிணக்கத்தோடு அமைச்சர் சேகர் பாபு எவ்வாறு செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. தேர்தலுக்காக மட்டும் இந்த நலத்திட்ட உதவிகள் அல்ல, தொடர்ந்து வருடம் முழுவதும் மக்கள் பணியே முதல் பணி என பணியாற்றி வருவதாக கூறினார்.
கடந்த வருட மழையில் சாலைகளில் மழை நீர் நின்றது. அதற்கு காரணம் கடந்த ஆட்சியின் விளைவு. ஆனால் இந்த ஆட்சியில் மாண்டாஸ் புயலின் போது எங்கும் மழை நீர் நிற்கவில்லை. அதற்கு அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியாவுக்கு நன்றி. புயல் வந்ததுக்கு அறிகுறியே இல்லை என பொதுமக்களே பாராட்டியதாக கூறினார்.
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பு கூறியுள்ளதாக குறிப்பிட்டு, அதற்கு முதலமைச்சரின் அயராத உழைப்பு மட்டும் திட்டங்கள் தான் காரணம் என கூறிய உதயநிதி, இதை மக்களிடம் எடுத்த சொல்ல வேண்டும் எனவும், இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என திமுகவினருக்கு உதயநிதி உத்தரவிட்டார்.







