ஆரணி அருகே திருமணம் தாண்டிய உறவால் 2 வயது ஆண் குழந்தையைக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த நபர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் ஊராட்சிக்குப்பட்ட காங்கரனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா (27). இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய போது அதே மருத்துவமனையில் எலக்ட்ரீசனாக பணிபுரிந்து வந்த சென்னை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஜெயசுதா கருவுற்று நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தில் ஜெயசுதா தஞ்சமடைந்தார். பின்னர் ஜெயசுதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது ஜெயசுதாவின் உறவினரான மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியது. மேலும் மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ஆனால் மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை விட்டு ஜெயசுதா மற்றும் ஜெயசுதாவின் குழந்தையை ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனையடுத்து மேஸ்திரி மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு உன் குழந்தை எனக்குப் பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்குப் பிறந்தது என்று 2வயது குழந்தை ஏனோக்ராஜை தாக்கியும் கொடுமைப் படுத்தியும் சூடு வைத்தும் தண்ணீர் தொட்டில் 2கால்களைப் பிடித்து மூழ்கடித்து மற்றும் கட்டையால் தாக்கியும் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தி வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் கடந்த மாதம் 21ந் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்து ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜ் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த 2வயது ஆண் குழந்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருதய எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனையடுத்து வீட்டிலிருந்த 2வயது ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் சந்தவாசல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2வயது ஆண் குழந்தை ஏனோக்ராஜ் இறந்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாய் ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுக்கா காவல்துறை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாணிக்கத்தை கைது செய்து கொலை வழக்கு பதிந்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.