பட்டுக்கோட்டை அருகே பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள், சாலையில் கிடந்த பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், அந்த பெண்கள் வைத்திருந்த பைகளைப் பிடுங்கி, அதிலிருந்த பொருட்களை கீழே கொட்டினார். தொடர்ந்து, காலணியை வைத்து பெண்ணை அடித்து விரட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், அந்த பெண்கள் கண்ணீர் மல்க பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள் : பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நியூஸ் 7 தமிழ், முக்கிய செய்தியாக வெளியிட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட சுவாமிநாதனை காவல் நிலையம் அழைத்து வந்து வாட்டாத்தி கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண், துறவிக்காட்டைச் சேர்ந்த போதும்பொண்ணு என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த பெண்ணையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க மறுப்பு தெரிவித்த நிலையில், குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சுவாமிநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.