கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறுவது என கர்நாடகா மாநில குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது!!
பின்னர், புலிகேசி நகர், கோலார் தங்கவயல், மற்றும் காந்திநகர் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக வேட்பாளர்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். கோலார் தங்கவயல் தொகுதியில் ஏ.அனந்தராஜ் மற்றும் காந்திநகர் தொகுதியில் கே.குமார் மற்றும் புலிகேசி நகர் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
நாளை மாலையுடன் வேட்புமனுவினை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர்கள், வேட்புமனுவை திரும்பப் பெறுவது என கர்நாடகா மாநில குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறைந்த வாக்குகள் பெற்று இரட்டை இலை சின்னத்தை அவமதிக்க விரும்பவில்லை என்பதால் வேட்புமனுக்களை திரும்பப் பெற உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.








