தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்டு 4ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் ஆக.4ல் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் இந்த தேர்தலில் காங்கிரஸின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஆலோசனையை தொடங்குகிறது. இந்த ஆலோசனையில் ஒவ்வொரு மாநிலத்தைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கெடுக்க உள்ளனர்.
அந்த வகையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர்கள், 8 எம்.பி.க்கள், 18 எம்எல்ஏ-க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளுக்கு மேல் தொடர்கிறார். எனவே இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







