ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
”எளிய மக்கள் மீது பொருளாதார தாக்குதல்களை ஒருபுறமும், சாதி மதத்தின் பெயரால் மக்களை கூறு போடுகிற அணுகுமுறையை மறுபுறமும் கையாளும் எதேச்சாதிகார பாஜக மற்றும் அதன் கூட்டாளியாக செயல்படும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை படுதோல்வி அடையச் செய்வதன் மூலம் தமிழகத்தில் இச்சக்திகளுக்கு இடமில்லை என்பதை இந்த இடைத் தேர்தல் மூலம் பறைசாற்றப்பட உள்ளது.
நடப்பது ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்றாலும், இன்றைய அரசியல் சூழலில் மக்கள் யார் பக்கம் என்பதைக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும், கட்சிகளும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.” என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “அனைத்து அரசுத்துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாஜக கோவில் நிர்வாகங்களையும், சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்க்க களமிறங்கியுள்ளது. இதனை ஒருபோதும் தமிழ்நாடு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இக்கோரிக்கையை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், பக்தர்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழ வேண்டும்.”
குட்கா – பான் மசாலா ஆகிய போதை பொருட்களை தடை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் சிறு-குறு நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை எதிர்ப்பு, பட்டியலின மக்கள் பாதுகாப்பு – பஞ்சமி நிலம் மீட்பு, அதிகரித்து வரும் வேலையின்மையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி தமிழ்நாட்டில் சிறப்பு மாநாடுகள் நடத்தப்படும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
– யாழன்