மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற கள்ளழகர், அழகர் மலைக்கு வந்தடைந்தார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 3ஆம் தேதி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். கடந்த 4-ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்ற நிலையில், மே 5ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 6 ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 7 ல் திவான் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், 8ஆம் நாள் நிகழ்ச்சியில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. கருப்பண்ணசாமி கோயில் முன்பு பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில், கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலில் இருந்து அழகர் மலையை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி,பொய்கைகரைப்பட்டி வழியாக செல்லும் கள்ளழகர் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர் கோயிலை சென்றடைந்தார்.
கள்ளர் கோலத்தில் மதுரை அழகர் கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு வண்ணமலர்கள் தூவி வரவேற்பு அளிக்கபப்ட்டதோடு, 21 திருஷ்ட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு, வாசல் வரை வந்து நின்று கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








