குறுவை நெல் சாகுபடி இழப்பிற்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு மே 24 அன்றே மேட்டூர் அணை திறந்ததால் நம்பிக்கையுடன் விவசாயிகள் வழக்கமான பரப்பளவைவிட கூடுதலான நிலையில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்பொழுது கதிர் வரும் நிலையிலும், அறுவடையாகும் முதிர் நிலையிலும் இது உள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையும், வளிமண்டல சுழற்சியினாலும் தொடர்ந்து விட்டுவிட்டு பெருமழையாக பொழிந்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவ மழை சராசரி அளவைவிட 90 சதம் கூடுதலாக பொழிந்துள்ளது. சில பகுதிகளில் 150 சதம் பதிவாகியுள்ளது. மேலும் மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி கூறுகிறது.
மேட்டூர் அணை நிரம்பிய சூழலில் தொடர்ந்து திறந்துவிடுவதாலும் பல இடங்களில் குறுவை நெல்கதிர்கள் சாய்ந்தும், அழுகியும், முளைத்திடும் நிலை ஏற்பட்டு உள்ளது. சில பகுதிகளில் சம்பாதெளி விதை விடுதலும் பாதித்துள்ளது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்கான காப்பீடு திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் பாதிப்பு ஏற்படின் தமிழக அரசின் மாநில இடர்பாடு நிதியிலிருந்து ஈடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை நம்பி விவசாயிகள் உள்ளனர்.
சில இடங்களில் வாழை, பூக்கள், காய்கறி, தானியப் பயிர்களும் பாதித்துள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை, வேளாண் துறைக்கு உரிய வழிகாட்டல் செய்து குறுவை நெல் அறுவடை முழு பாதிப்பிற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 42,000, பகுதி பாதிப்பிற்கு உரிய அளவு நிவாரணமும் வழங்கி உடன் உதவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








