32.9 C
Chennai
June 26, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக விளங்கட்டும் – தீக்கதிருக்கு விளக்கம் கொடுத்து பிரச்னையை முடித்த முரசொலி!

தோழமை என்பது சுட்டிக்காட்டி தவறுகளை திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர வேகமாகத் தட்டி விட்டு பின்னர் தடவிக் கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிருக்கு திமுகவின் முரசொலி நாளேடு பதில் அளித்துள்ளது.

12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிலாளர் திருத்தச் சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரெங்கராஜன் செய்த விமர்சனம் குறித்து தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, திமுக நாளிதழான முரசொலி நேற்று ‘சி.பி.எம் கட்சியைத் தவறாக வழி நடத்துவது யார்?’ என்ற தலைப்பில், பதிலடி கொடுக்கும் விதமாக கட்டுரை எழுதி வெளியிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் மக்களாட்சியின் மாண்பையும், ஜனநாயகத்தின் குரலையும் மதித்து தொழிலாளர் திருத்த சட்டத்தை உடனடியாக இரண்டு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்ப பெற்றுவிட்டதாக முரசொலி கூறியிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரெங்கராஜன், தமிழ்நாட்டை திமுக அரசு ஆட்சி செய்கிறதா ? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்று வினவியிருப்பதற்கு முரசொலி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே ரெங்கராஜனுக்கு சொன்னது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள முரசொலி, கூட்டணியில் இருந்து கொண்டு பொதுவெளியில் கூக்குரலிடுவது தான் கூட்டணி தர்மமா ? என வினவியுள்ள முரசொலி, திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால் என்று சொல்லும் தகுதி டி.கே.ரெங்கராஜன் போன்றோருக்கு இல்லை என்றும் காட்டமாக சாடியிருந்தது.

இந்த நிலையில் இன்று சுயமரியாதை என்பது கழகக் கூட்டணியின் அடித்தளம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிருக்கு திமுகவின் முரசொலி நாளேடு விளக்கம் அளித்துள்ளது.

முரசொலி அளித்துள்ள விளக்கத்தில், 3.5.2023 அன்று வெளியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான தீக்கதிர் ஏட்டில் தோழர் டி.கே. ரெங்கராஜனின் மே தின உரையின் சில பகுதிகள் தவறான பொருளில் அமைந்துவிட்டது. தொழிற்சங்கங்களும், தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் சுட்டிக்காட்டிய நிலையில் இந்தச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதும், பின்னர் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டதும் வரவேற்கத்தக்க ஒன்று என்பதே டி.கே.ரெங்கராஜன் உரையில் மையக் கருத்தாக அமைந்திருந்தது என்று தீக்கதிர் ஏடு விளக்கம் தந்துள்ளது.

தீக்கதிர் தந்துள்ள விளக்கத்துக்கு நன்றி! பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று செயல்படவேண்டும் என்ற குறிக்கோளில் செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையில் இயங்கும் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை தோழமைக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கேற்ப உடனடியாக ஒத்தி வைத்தது மட்டுமின்றி அதனைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும் அறிவித்துவிட்ட நிலையில் தீக்கதிர் ஏட்டில் வெளிவந்த திரு.டி.கே.ரெங்கராஜனின் பேச்சு தேவையற்ற ஒன்று என்பதால் திருமாவேலன் எழுதிய விளக்கக் கட்டுரை முரசொலியில் வெளியிடப்பட்டது.

தோழமை என்பது சுட்டிக் காட்டி தவறுகளை திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர வேகமாகத் தட்டி விட்டு பின்னர் தடவிக் கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது! சுயமரியாதை என்பது கழகக் கூட்டணியின் அடித்தளம்! நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக விளங்கட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிருக்கு பதில் அளித்து பிரச்னையை முரசொலி முடித்து வைத்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading