“தமிழகத்தில் புத்தகப் புரட்சி நடக்க லியோனியும் ஒரு காரணம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் புத்தகப் புரட்சி நடக்க லியோனியும் ஒரு காரணம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் ‘வளர்ந்த கதை சொல்லவா’ நூல்…

தமிழகத்தில் புத்தகப் புரட்சி நடக்க லியோனியும் ஒரு காரணம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான
திண்டுக்கல் ஐ.லியோனியின் ‘வளர்ந்த கதை சொல்லவா’ நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அதன் முதல் பிரதியை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு பெற்றுக் கொண்டார்.

புத்தகத்தை வெளியிட்டு விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.லியோனி டைமிங் ஜோக்ஸ் அடிப்பார். தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பார்வையாளர்களை மட்டும் இல்லாமல் வந்திருக்க கூடியவர்களையும் தன் வசப்படுத்த கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. நான் இரவில் கார் ஒட்டி செல்லும் போது திண்டுக்கல் லியோனி பேச்சை தான் கேட்டு செல்வேன். அப்படி கேட்டு கேட்டு அவருடைய பேனாகவே நான் ஆகிவிட்டேன்.

அவர் வளர்ந்த கதை நெஞ்சை ஈர்க்கிறது. வளர்ந்து வரும் பேச்சாளர்கள் படிக்கும் பாடமாக இந்த புத்தகம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள், எழுத்தாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.


அதிமுக ஆட்சியில் ஓராண்டு காலத்தில் 6 புத்தகம் தான் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் 120 புத்தகங்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு முழு காரணம் லியோனியின் முயற்சி தான். இன்னும் 150 புத்தகங்கள் தயாராகி வருகிறது. திசை தோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், கலைக்களஞ்சியம் சிறுவர் களஞ்சியம் என எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், பாடநூல் கழக புத்தகம் கொடுக்கப்படுகிறது. தற்போது புத்தகத் திருவிழாக்களில் பாடநூல் கழக புத்தகங்கள் விற்பனையாகி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புத்தகப் புரட்சி நடக்க லியோனியும் ஒரு காரணம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி. ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.இளங்கோவன், மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.