லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க, உயர்நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 9.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளது.
அப்போது 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்றால் 18.45 மணி நேரம் தான் ஆகிறது. எனவே 6 காட்சிகள் திரையிடலாம் என தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனிடையே அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அனிதா சுமந்த் வழக்கு மாற்றப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என அறிவித்தார்.







