5 மாதங்களில் நான்காவது முறையாகக் கடனுக்கான வட்டியை 50 புள்ளிகள் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
வங்கிக் கடன் விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் அதிகரித்து ரெப்போ ரேட் விகிதம் 5.90% ஆக உயர்வு 5 மாதங்களில் 4வது முறையாக வட்டி உயர்வு வட்டி விகிதம் உயர்வால் பங்குச்சந்தைகள் எழுச்சி விலைவாசி விண்ணைத்தொடும் நிலையில் உள்ளது. பணவீக்க விகிதமும் நடைமுறையில் அச்சுறுத்தும் விதமாக 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரெப்போ ரேட் விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்ட முடிவுகளை மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 50 புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார். இதன் மூலம் ரெப்போ ரேட் 5.40 சதவீதத்திலிருந்து, 5.90 சதவிகிதமாக உயர்கிறது. இதனால் சில்லறை கடன், வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன் மற்றும் இதர கடன் வாங்கியவர்கள் செலுத்தும் மாதாந்திர தவணையின் தொகை உயரும்.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேசியபோது, “கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு, உலகெங்கும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்ற அச்ச நிலை நீடிப்பதாகவும், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். உலக பொருளாதாரத்தின் தாக்கம், இந்தியச் சந்தைகளில் எதிரொலிப்பதால், இந்தியாவில் பண வீக்க விகிதமும், விலைவாசியும் அதிகரித்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.
நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவையான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் கூறினார். அமெரிக்க டாலர் மதிப்பானது 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும், இந்த நெருக்கடியான சூழலிலும், இந்திய ரூபாயும்,பொருளாதாரமும் நிலையாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவும், பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்த சக்தி காந்த தாஸ், அந்நிய செலாவணி கையிருப்பு 537.5 பில்லியன் டாலராக உள்ளது என்றும், வங்கிகள் வழங்கும் கடன் அளவு 16.2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
5 மாதங்களில் 4வது முறையாக ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து, இனி வங்கிகளில் கடனுக்கான வட்டி மேலும் அதிகரிக்கும் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு என்ற அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1016 புள்ளிகள் அதிகரித்தது. பங்குச்சந்தை வர்த்தக மதிப்பு சுமார் 4 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
– ரா.தங்கபண்டியன்