சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 3டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சையை செய்யும் முறையை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் கண்தானத்திற்காக இந்த ஆண்டில் 10ஆயிரம் ஜோடி கண்கள் தானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், இதில் 2ஆயிரத்து 612 கண் ஜோடிகள் தானமாக பெற்று கண்வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கண்தானத்தில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளதால் கண் தானம் குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சக மருத்துவர்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.








