திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை கொள்ளை செயின் பறிப்பு என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
வி.கே.சசிகலா தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பணம் செய்து தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி இன்று உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த.வி.கே. சசிகலாவிற்கு வேங்கையன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய வி.கே.சசிகலா தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட செய்திகள் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகாலங்களில் தினம் தோறும் வந்த வண்ணமாக உள்ளது என்றார்.
இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என குற்றம்சாட்டினார். இரட்டை இலை சின்னத்தை முடக்க முயல்வோர்களுக்கு மக்கள் தக்க பாடங்கள் அளிப்பார்கள் எனவும், அதிமுக உருவாக்கிய மக்கள் தலைவர் எம்.ஜிஆர் அதனை வழி நடத்திய ஜெயலலிதா போன்றவர்களின் கனவோடு இந்த கட்சி நூற்றாண்டு காலம் தொடர்ந்து மக்கள் பணியாற்றும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
– இரா.நம்பிராஜன்








