கொங்கு நாடு சர்ச்சை: கண்டனம் தெரிவித்து சிபிஐ அறிக்கை

தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாடு என தனியாக பிரிக்கப்படும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு…

தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாடு என தனியாக பிரிக்கப்படும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தும், 35 ஏ பிரிவில் வழங்கப்படிருந்த உரிமைகளையும் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் பறித்ததை நாடு மறந்துவிடவில்லை. ஒன்றுபட்ட ஜம்மு – காஷ்மீர் மூன்றாக உடைக்கப்பட்டதால் அங்கு அமைதியற்ற நிலை தொடர்கிறது. இதே வழிமுறையில் தமிழ்நாட்டை பிளவுப்படுத்த பாஜக ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்தச்செய்தி உண்மையானால் அது ஆபத்தான பாரதூர விளைவுகள் கொண்டதாகும். இந்த பிளவுவாத சிந்தனையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது குறித்து பாஜக ஒன்றிய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியைத் தடுக்க, பாஜகவும், அதன் பரிவாரங்களும் திமுக மீதும், அதன் தலைவர்
திரு. மு.க.ஸ்டாலின் மீது கடுமையான அரசியல் தாக்குதல் நடத்தி வந்தன. ஆர்எஸ்எஸ் – பாஜகவின் பகை வளர்க்கும் அரசியலை உணர்ந்த மக்கள் பாஜக அங்கம் வகித்த கூட்டணியை நிராகரித்தனர்.

தற்போது பாஜக – ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மேற்கு மாவட்டங்களை குறி வைத்து பிளவுவாத அரசியல் கருத்துக்களை பரப்புகிறதோ என்ற ஆழமான சந்தேகம் எழுகிறது.
இப்பகுதியில் அமைதியாகவும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் மக்களிடம் வெறுப்பு மற்றும் பகை அரசியலை வளர்ப்பதற்கு “கொங்கு நாடு” என்ற விஷ விதை தூவும் ஒன்றிய அரசின் திட்டம் புலி வால் பிடித்த கதையாக முடியும் என்பதை எச்சரிக்கிறோம்.
முக்கிய உற்பத்தித் தொழில்களும், செழிப்பான விவசாயமும் உள்ள இப்பகுதியில் அமைதி சீர்குலைந்தால் எண்ணிப்பார்ககவும் முடியாத இழப்புகள் ஏற்பட்டுவிடும். இதனை மேற்கு மாவட்ட மக்களும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு பெருமக்களும் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள்.

அரசியல் ஆதாயத்துக்காக பாஜக ஒன்றிய அரசு திட்மிட்டுள்ள விஷம விளையாட்டை, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கட்சி அரசியல் எல்லைகளைக் கடந்து, ஓரணியாக திரண்டு முறியடிக்க முன் வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.