நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரையில் காற்றின் திசை மாற்றத்தால் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் மீன் பிடி சீசன் காலமாகும்.இச்சமயங்களில் மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இங்கு தங்கி இருந்து மீன்களை பிடிப்பது வழக்கமாகும். தற்போது மீன் பிடி சீசன் நிறைவடைய உள்ளதால் கடலில் காற்று வீசும் திசையானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது.
இதனால் கடலானது சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கோடியக்கரையில் தங்கி இருந்து மீன் வந்த வெளியூர் மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் மீன் பிடி பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோடியக்கரை கடற்கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
—வேந்தன்







