கரூர்;விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். கரூர்…

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக
குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் அடுத்த சுக்காலியூர், காந்திநகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.  இதன் கட்டுமான பணியின் போது கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் நிவரண நிதி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு, முதியோர் உதவித்தொகை, இறப்பு சான்று, வாரிசு சான்று, ஆதரவற்ற விதவை சான்று உள்ளிட்ட ஆவணங்களை தமிழக அரசின் சார்பில் வழங்கினார்.

இந்த விபத்தில் உயிரிழந்த மோகன்ராஜ் என்பவர் திருமணம்  ஆகாதவர் என்பதனால் அவரின் தாயார் கலைமணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிவாரண நிதியாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையும், மாதம் ரூ.7500 உதவித்தொகையும், மற்றும் வாரிசு சான்றும்  வழங்கப்பட்டது.

இறந்து போன கோபால் என்பவரின் மனைவி விஜயலட்சுமிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக நிவாரண உதவியாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையும், ஆதி திராவிடர் நல பள்ளியில் சமையலர் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும் , அவரின் 11 வயது மகள் மோனிகாவிற்கு கல்வி நிதி உதவியாக மாதம் ரூ.7500. வழங்கப்பட்டது. மேலும்  ரூ.8.68 லட்சம் மதிப்புடைய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு ஆணையும்,  இறப்புச் சான்று வாரிசுச் சான்று உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

உயிரிழந்த ராஜேஷ் குமார் மனைவி துளசிமணி என்பவருக்கு தொழிலாளர் நலவாரிய சார்பில்  ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், மாதாந்திர உதவித் தொகை ரூ.1000-க்கான ஆணையனையும், ஆதரவற்ற விதவை சான்றும், இவரின் குழந்தைகளுக்கு கல்வி உதவியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலம் மாதாந்திர ரூ.4000-க்கான உதவித்தொகைக்கான ஆணையினும், இறப்புச் சான்று வாரிசு சான்று ஆகியவை வழங்கப்பட்டது.

இதே போன்று விஷ வாயு தாக்கி இறந்து உயிரிழந்த போன சிவகுமார் என்பவரின் மனைவி ராஜேஸ்வரிக்கு தொழிலாளர் நலவாரிய நிவாரண உதவியாக ரூ 5.லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. அதோடு இறந்து போனவரின் தாயார் மாரியாய் என்பவருக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ.1000-க்கான ஆணை வழங்கப்பட்டது. அதோடு சிவகுமாரின் குழந்தைகளின் கல்வி உதவி தொகையாக மாவட்ட குழந்தைபாதுகாப்பு அலகு மூலம் மாதம் ரூ.4000-க்கான ஆணையினையும், மற்றும் வாரிசுச் சான்று இறப்பு சான்று உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

மேலும், கட்டிட தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள்
மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
உறுதி அளித்தார்.

 

பரசுராமன்.ப

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.