கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனசரத்துக்கு உட்பட்ட வெள்ளாம்பி
கிராம ரப்பர் தோட்டத்தில், ரப்பர் பால் வெட்டச் சென்ற நபரை கரடி
கடித்ததால் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வெள்ளாம்பி கிராமத்தை
சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு அந்த பகுதியில் ரப்பர் தோட்டம் உள்ளது.
தினமும் காலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காக கிருஷ்ணன், தோட்டத்திற்கு
செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் தோட்டத்திற்கு சென்ற போது
எதிர்பாராதவிதமாக வந்த கரடி, அவரை துரத்திச்சென்று கடித்ததில் காலில்
பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி
வந்தனர். இதனை தொடர்ந்து கரடி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.
காயத்துடன் கிடந்த கிருஷ்ணன் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து
வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கு.பாலமுருகன்