கன்னியாகுமரியில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் உடலைத் தோண்டியெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் சீயோன் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பன். 23 வயதான இவரது மகன் லிபின் ராஜா, ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதியன்று இரவு கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற லிபின் ராஜா வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தந்தை செல்லப்பன், நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் லிபின் ராஜாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் தேடியபோது, அவர்கள் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் பழவூர் நான்கு வழிச்சாலையின் அருகேயுள்ள வாய்க்காலில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தைக் கைவிட்டனர்.







