கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்த பெண் மீது தாக்குதல் நடத்திய பேரூராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மீன் சந்தையில், சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள் மற்றும் கேரள பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்து அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த மீன் சந்தையில் நெகிழி பை விநியோகம் செய்வதாக களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ராமதேவிக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பேரூராட்சி ஊழியர்களுடன் ராமதேவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மீன் விற்பனை செய்து கொண்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேரி குட்டி, நெகிழி பை பயன்படுத்தியதாக கூறி அபராதம் விதிக்க முற்பட்டனர். மேலும், அவர் வைத்திருந்த பணப் பையை பறிக்கவும் முயற்சி செய்தனர்.
இதையும் படியுங்கள் : அய்யா வைகுண்டர் அவதார விழா – சென்னையில் பக்தர்கள் ஊர்வலம்
இதற்கு மறுப்பு தெரிவித்து மேரி குட்டி வாக்குவாதம் செய்த நிலையில், ஆத்திரம் அடைந்த பேரூராட்சி ஊழியர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கை எழும்பு உடைந்து, மேரி குட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தாக்குதல் நடத்திய பேரூராட்சி ஊழியர்கள் மீதும், செயல் அலுவலர் ரமா தேவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







