காமராஜர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜர் 124-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழகத்தின் கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.

கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.

எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!, கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.