ஏழ்மைக்கு மாற்று இலவசங்களாக இருக்க முடியாது, என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதியில் பிரச்சாரத்தை முடித்த கையோடு தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் உதகையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், தமிழகத்தில் ஊழல் கட்சியை மாற்றி சீரமைக்க மற்றொரு ஊழல் கட்சியாக இருக்க முடியாது என்றார். கடந்த 50 ஆண்டுகளில் கட்சிகள் வளர்ச்சியடைந்துள்ளது, ஆனால் நாட்டில் பெரிய வளர்ச்சி நடக்கவில்லை என்று சாடினார்.
தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் நீலகிரி மாவட்ட மக்கள் பயனடைகின்ற வகையில் குளிரூட்டும் காய்கறி சேமிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும், தோட்ட தொழிலாளர்கள் ஆதாய விலை சம்பளமாக நிர்ணயிக்கப்படும், மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
பரப்புரையையடுத்து தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் பணிகள் சிறப்பாக உள்ளதாகவும், அவர்கள் தங்களது பணியை செய்வதாக கூறினார். பல்வேறு பிரமுகர்கள் இடங்களில் வருமான வரித் துறை மேற்கொண்டு வரும் சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சோதனைகள் மேற்கொள்வதில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றார். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை தாம் கருத்து திணிப்பாகவே பார்ப்பதாக அவர் கூறினார்.







