திமுக அரசு சரியாக செயல்பட்டிருந்தால் ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது எனவும், மக்களை காக்கும் நடவடிக்கை தேவை எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை திமுக அரசு ஓராண்டில் நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கி வைத்து அவர்கள் தாங்கள் நிறைவேற்றிய திட்டம் என சொல்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மு.க.ஸ்டாலின் மேயராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் தமிழ் நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை உருவாக்கி, வெள்ளம் தேங்காத நிலையை ஏற்படுத்தியிருந்தால் எங்களுடைய 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நாங்கள் எதுவும் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என சாடியுள்ளார். சென்னைக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுமைக்கும் அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை மக்கள் நன்றறிவார்கள்.
தனது தலைமையிலான ஆட்சியில், 4 ஆண்டுகளில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 196 கி.மீ. நீள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 2015-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த 306 இடங்கள், 2020-ஆம் ஆண்டில் 3-ஆக குறைக்கப்பட்டதாக கூறினார். சென்னையில் 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 40 நீர்நிலைகளில் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் திமுக ஆட்சியில் இப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பிறகு, ஓராண்டு தாமதத்திற்குப் பிறகே பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த ஆறு மாத காலமாக தமிழகம் முழுவதும் முறையாக திட்டமிடாததால், எங்கு திரும்பினாலும் சாலைகள் தோண்டப்பட்டு, ஏதாவது
ஒரு வேலையை திமுக அரசு முழுமை செய்யாமல் விட்டிருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் கூற்றுப்படி 1,950 கி.மீ. பணிகள் முழுமையாக முடிந்திருந்தால் இந்த ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர்
தேங்கியிருக்காது என தெரிவித்துள்ளார்.
இன்னும் பெருமளவில் பருவ மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனவே, அரசை நம்பாமல் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர் சாடியுள்ளார். குறிப்பாக குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும்
சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.