நகைக்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு

நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சட்டமன்றத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு…

நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சட்டமன்றத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உள்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

5 சவரனுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் எனத் தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 5 சவரனுக்கு கீழ் அடகு வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  “நிலுவையிலுள்ள ரூ.6,000 கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்கள் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து அதாவது பொதுமக்களின் வைப்புத் தொகையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தள்ளுபடி தொகையினை அரசே வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நகைக்கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.